கோலாலம்பூர், பிப்ரவரி.16-
மலேசிய சமூகங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், கட்டியெழுப்பப்பட்ட பிணைப்பையோ அல்லது நம்பிக்கையையோ பலவீனப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.
மாறுபட்ட கருத்துக்கள் நம்மை ஒன்றிணைக்கும் பிணைப்பைத் தளர்த்த நாம் அனுமதிக்க முடியாது. மாறாக, இத்தகைய வேறுபாடுகளை நற்புறவை வலுப்படுத்துவதற்கும், தப்பெண்ணங்களை நிராகரிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மற்றும் விவேகத்தையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆண்டு சீனப் நாட்காட்டியின்படி 'குதிரை ஆண்டு' என அனுசரிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டிய பிரதமர், "சீனப் புத்தாண்டு எப்போதும் செழிப்பு, நம்பிக்கை மற்றும் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான வலிமையை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த குதிரை ஆண்டில், விடாமுயற்சி, தைரியம் மற்றும் போராட்டக் குணத்தை நாம் கொண்டாடுவோம். அதே வேளையில், அவை விவேகம் மற்றும் மிதமான போக்குடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.








