கோலாலம்பூர், பிப்ரவரி.09-
மலேசிய ஒப்பந்தம் 1963 தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுடன் ‘town hall’ கலந்துரையாடல்களை நடத்துவது குறித்த பரிந்துரையை சபா மற்றும் சரவாக் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முஸ்தஃபா சக்மூட் வரவேற்றுள்ளார்.
இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, வெளிப்படையான கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில் இது போன்ற கலந்துரையாடல்கள் மூலம் பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அமைச்சின் இணையதளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட MA63 முகப்புக்கு மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடங்கப்பட்ட முதல் மூன்று நாட்களுக்குள் 2,000-த்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த முகப்பானது MA63 தொடர்பான பிரச்சினைகள் குறித்த தகவல்களைக் கொண்டுள்ளதுடன், வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்யும் வகையில் புதுப்பிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
அதே வேளையில், MA63 தொடர்பான 13 விவகாரங்கள் தீர்க்கப்பட்டுவிட்டன என்றும், 16 விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன என்பதையும் முஸ்தஃபா சக்மூட் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் ஒரு விவகாரமானது, சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு 600 மில்லியன் ரிங்கிட் சிறப்பு மானியம் வழங்குவதன் மூலம் தற்காலிக அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








