கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையம் ஒன்றில், நடந்த கலவரம் சம்பவத்தில், செய்தி சேகரித்த செய்தியாளர்களிடம், அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நீக்குமாறு போலீசார் பிறப்பித்த உத்தரவு ஒரு "தவறான புரிதல்" காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுடனான தங்களின் நடவடிக்கைகளில், போலீசார் சகிப்புத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகளுக்கு இடையே தெளிவாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாதில் மர்சூஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருந்தபோது, சில பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்த போது, அங்கு தகவல் தொடர்பு பிழை ஏற்பட்டுவிட்டதாகவும் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபாதில் மர்சூஸ் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, சம்பவத்தின் போது ஒரு பெண் பத்திரிகையாளரைச் சீருடை அணியாத இரு போலீசார் அணுகி, அவரது அலைபேசியைச் சோதனையிட்டதுடன், அந்தச் சம்பவம் தொடர்பான அனைத்துப் புகைப்படங்களையும் காணொளிகளையும் அழித்துவிடுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் இரு பத்திரிகையாளர்களும் தங்கள் பதிவுகளை அழித்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அப்பதிவுகள் ஏதேனும் ஒரு வகையில் பரப்பப்பட்டால், அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.








