கவர்ச்சிக்கரமான வருமானத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் பெற்று ஓன் லைன் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் மையப்பகுதியான பெர்சியாரான் கேஎல்சிசியில் ஆடம்பர வாடகை வீடொன்றை தளமாக கொண்டு தொலைபேசி அழைப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இக்கும்பல் பற்றி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோலாலம்பூர் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் உள்நாட்டைச் சேர்ந்த 12 ஆண்களும், அந்நிய நாட்டைச் சேர்ந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.
நேற்று முன் தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட 18 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 23 பேரில் சீனா, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசப் பிரஜைகளும் அடங்குவர் என்று ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா குறிப்பிட்டார்.







