மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதலால், இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பந்தயத் தொடரின் ஒரு சுற்றுப் போட்டியை மலேசியா நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே போர் சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா பந்தயங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், வரும் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள கத்தார் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் ஆகிய போட்டிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்றாக அக்டோபர் 4-ஆம் தேதி ஒரு சுற்றுப் போட்டியை நடத்த மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முக்கிய விருப்பத் தேர்வுகளாக பரிசீலிக்கப்படுகின்றன.
மலேசியாவின் செபாங் பன்னாட்டு சுற்றுவட்டம் கடந்த 1999 முதல் 2017 வரை ஃபார்முலா ஒன் மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. பின்னர், செலவுகள் அதிகரிப்பு, உரிமக் கட்டணங்கள் காரணமாக போட்டி அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டது.
தற்போது சூழ்நிலை சாதகமாக அமைந்தால், சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஃபார்முலா ஒன் மீண்டும் மலேசியாவுக்கு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.








