மூவார், நவம்பர்.23-
ஜோகூர், பாகோ அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர். இரவு 11 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களும் ஒரு லாரியும் ஈடுபட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் 20 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் லாரியின் பின்புறம் மோதியதால் விபத்து ஆரம்பித்தது தெரிய வந்துள்ளதாக மூவார் மாவட்டக் காவற்படைத் தலைவர், உதவி ஆணையர் ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மீது, பின்னால் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதியதில் இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டிய 24 வயது இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையிலும் உடலிலும் பலத்த காயம் அடைந்த இந்த இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது. விபத்தில் சிக்கிய மற்ற மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.








