கோலாலம்பூர், ஜூலை 03-
நாட்டில் நிதி சார்ந்த பல வகையான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தற்போது புதிதாக, இல்லாத நெடுஞ்சாலை நிர்மாணிப்பு திட்டத்தை நம்பி, 250 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார், பெயர் கூற விரும்பாத முன்னாள் துணையமைச்சர் ஒருவர்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தலைமையிலான அரசாங்கத்தில் துணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.
நிதியமைச்சுக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பின் கீழ், அந்த நெடுஞ்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் -மின் உறவினர் என்றும் கூறி, மோசடி பேர்வழிகள் அவரை ஏமாற்றியுள்ளனர்.
கட்டுமான பொருள்களை பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு நிறுவனம் தேவைப்படுவதாக ஏமாற்றுப்பேர்வழிகள் கூறியதை நம்பிய அவர், அந்த குத்தகையை பெறுவதற்கான கட்டணமாக 250 ஆயிரம் வெள்ளியை செலுத்தியுள்ளார்
தனக்கு தெரியாமல், தனது மகன் அத்தொகையை செலுத்தியதாகவும், அதன் பின்னரே, அப்படியொரு நெடுஞ்சாலை நிர்மானிப்பு திட்டம் இல்லாததை தாம் கண்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பெர்லிஸ், பாடாங் பெசார்-ரிலிருந்து பேராக், சங்காட் ஜெரிங் வரையில், சுமார் 276 கிலோமீட்டர் தூரத்தை உட்படுத்தி கட்டப்படவிருந்த நெடுஞ்சாலை திட்டம், இறுதியில் கைவிடப்பட்டது.
அத்திட்டத்தை பற்றி நன்கு அறிந்துள்ள ஏமாற்றுப்பேர்வழிகள், அத்திட்டத்தின் பெயரில், அந்த மோசடியைப் புரிந்துள்ளனர்.








