பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக வரும் ஜுன் 29 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு முன் எதிர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமருக்கு எதிரான இந்த எதிர்ப்புப் பேரணிக்கு பின்னணியில் ஒரு NGO இருப்பது தொடர்பில் அது குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று போலீசாரை PKR கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக இப்படியொரு எதிர்ப்பு பேரணி நடத்தப்படுவதானது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மறைமுகமாக விடக்கப்படும் ஓர் அச்சுறுத்தலாகும்.
இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாஙகத்தை கவிழ்ப்பதற்கு மக்களை தூண்டிவிடும் முயற்சியாகும் என்று PKR கட்சியின் புத்ராஜெயா தொகுதி தலைவர் Fikri Aziz தெரிவித்துள்ளார்.
இப்படியொரு எதிர்ப்பு பேரணி நடத்தப்படுவது மூலம் அது தேசிய பாதுகாப்பிற்கு மிரட்டல் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத் திட்டங்களை வேண்டுமென்றே நாசப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சதி முயற்சியாகும்.
எனவே இது குறித்து போலீஸ் துறை உடனடியாக புலன் விசாரணை மேற்கொண்டு, இந்த எதிர்ப்பு பேரணிக்கு பின்னணியில் உள்ள அந்த NGO-வின் உண்மையான நோக்கம் கண்டறியப்பட வேண்டும் என்று அந்த PKR தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








