குவாந்தான், பிப்.24-
நெடுங்காலமாகச் சொந்தக் கட்டடம் இல்லாமல் இயங்கி வந்த , பகாங், குவாந்தான், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபித் சிங் டியோ உறுதியாகக் கூறினார்.
இன்று பள்ளி மேளாலர் வாரியம், சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS- ஸில் முறையாகப் பதிந்து கொண்டது.
பள்ளி மேளாலர் வாரியம், ஆர்.ஓ.ஸ் எனப்படும் சங்கப் பதிவு இலாகாவில் பதிவு பெறச் சிக்கலை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அதற்கு நல்லதொரு வழி கிடைத்திருப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
இலக்கவியல் அமைச்சு, கல்வியமைச்சின் ஒத்துழைப்போடு செயல்பட்டதன் வழி, பதிவு இலாகாவில் பள்ளி மேலாளர் வாரியம் முறையாகப் பதிந்து கொண்டதாக அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார்.
ROS இன் கீழ் இதுவரை பதிவு செய்யப்படாத பள்ளி மேலாளர் வாரியமான LPS நிலை காரணமாக இந்த பள்ளி நிரந்தர கட்டடம் கட்டுவதில் தாமதத்தை எதிர்கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்குடன் தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சினை குறித்து கலந்துரையாட சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். இந்த கூட்டத்தில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்கொள்ளும் சவால் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அதன் விளைவாக இன்று, ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் வெற்றிகரமாக ROS இல் பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சியை நான் வரவேற்கிறேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம். பள்ளி அதன் சொந்தக் கட்டடத்தில் இயங்குவதற்கான உடனடித் தீர்வைக் காண நாங்கள் இப்போது கல்வி அமைச்சுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இலகக்வியல் அமைச்சர் கோபிந்த் சிங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நெடுங்காலமாக முறையான கற்கும் வசதியின்றி, கெபினில் இயங்கி வந்த ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம் பலரது கண்டனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முதற்கட்ட தீர்வாக இந்த ஆர்.ஓ.எஸ் பதிவு நடைபெற்றுள்ளது.







