சிபு, நவம்பர்.01-
தனது இரு இளம் வயது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 35 வயது வளர்ப்புத் தந்தைக்கு, சிபு அமர்வு நீதிமன்றம் மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 18 பிரம்படிகளையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் மின் நிறுவன ஊழியரான அந்த ஆடவர், தன் மீதான ஒன்பது குற்றச்சாட்டுகளை நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொண்டதோடு, தன்னை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
என்றாலும், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் சிந்தியா எமெல்டா ஜேரி, குற்றவாளி இரு சிறுமிகளையும் தனது ஆசைக்குப் பயன்படுத்தியிருப்பது மிகக் கடுமையான குற்றம் என்று வலியுறுத்தி, கடுமையான தண்டனை கோரினார்.
வளர்ப்புத் தந்தையால் இரு இளம் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் கடுமையானக் குற்றமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி முஷிரி பீட், தண்டனைகள் ஒன்றின் பின் ஒன்றாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.
15 மற்றும் 16 வயதான அந்த இரண்டு சிறுமிகளும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் குற்றவாளியால் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, அவர்கள் தங்கள் தாயிடம் நடந்ததை தெரிவித்ததையடுத்து, வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.








