மலேசியாவில் இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று திங்கட்கிழமை மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் விளக்கமளிக்கப்பட்டது.
இது குறித்து தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில், இன்று இஸ்தானா புக்கிட் துங்குவில் நடைபெற்ற நேர்காணலின் போது, “இணைய பாதுகாப்புச் சட்டம் 2025” அமல்படுத்தல் குறித்து மாமன்னருக்கு விளக்கம் அளித்தார்.
இச்சட்டமானது, இணைய தளங்களில் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான தெளிவான பொறுப்புகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக இளம் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இது முக்கிய பங்களிக்கவுள்ளது.
மேலும், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதை கட்டுப்படுத்த வயது சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து உருவாக்கப்படும் போலி கணக்குகள் தொடர்பான பிரச்சினைகளையும் இந்தச் சட்டம் தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பாஹ்மி பாட்சில் தெரிவித்துள்ளார்.








