நேபாள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள மலேசியர்களின் குடும்பங்களின் காத்திருப்பு நாளுக்கு நாள் வேதனையாகி வருகிறது.
கைலாஷ் மலைக்கு ஆன்மிகப் பயணம் செல்ல, கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைத்ததால் இணைந்தார் 48 வயதான கோமதி ரெத்தினம்.
அவரது சகோதரர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கூறுகையில், பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் கோமதி இந்தப் பயணத்தில் இணைந்ததாக தெரிவித்தார்.
பயணம் எளிதானதல்ல என்பதால் குடும்பத்தினர் கவலைப்பட்டிருந்தாலும், இறைவனின் அழைப்பு என்ற நம்பிக்கையுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு கோமதி புறப்பட்டுச் சென்றதாக அவர் கூறினார்.
ஆனால், இப்போது அந்த மகிழ்ச்சி… கண்ணீராக மாறியுள்ளது.
தாயிடம் தினமும் தொலைபேசியில் பேசி வந்த கோமதியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
“நாங்கள் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. நல்ல செய்தியா, கெட்ட செய்தியா… ஏதாவது ஒரு தகவலுக்காகத்தான் காத்திருக்கிறோம்,” என அவரது சகோதரர் கண்ணீருடன் கூறினார்.
இதற்கிடையில், பயணத்துக்கு முன் தனது மகள் ராஜிதா சிவன் எந்தவிதமான இறுதி செய்தியையும் கூறவில்லை என அவரது தந்தை பி. சிவன் தெரிவித்துள்ளார்.
குடும்பங்களுக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை… அன்புக்குரியவர்கள் உயிருடன் திரும்ப வேண்டும் என்பதுதான்.








