கோலாலம்பூர், நவம்பர்.13-
வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவிற்குள் அனுமதிக்க, லஞ்சம் பெற்றதாக 10 அமலாக்க அதிகாரிகளையும், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
குடிநுழைவுத் துறையின் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை விரைபடுத்துவதற்காக, அவர்கள் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகின்றது.
இதனையடுத்து, 7 ஆண் அதிகாரிகளும், 4 பெண் அதிகாரிகளும் நேற்று கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 1 லட்சத்து 16,000 ரிங்கிட் ரொக்கத் தொகை, 14 தொலைத் தொடர்பு சாதனங்கள், தங்க நகைகள், கார்கள் மற்றும் மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய, செட்டிங் முகப்பிட ஊழல் விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.








