கோலாலம்பூர், டிசம்பர்.06-
நாட்டில் பருவ நிலையைப் பொறுத்து, இனி வானிலை நிலவரங்கள் இருக்காது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.
நவீன வானிலை முன்னறிவிப்பு தரவுகள், அறிவியல், செயற்கை நுண்ணறிவான AI மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினி தொழில்நுட்பங்களைச் சார்ந்துள்ளது என்பதை டாக்டர் ஹிஷாம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியாவின் வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தையும் வேகத்தையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இனி மலேசியாவின் வானிலையின் முன்னறிவிப்புகளை விரைவாகவும், துல்லியமாகவும் வழங்குவதற்காக, செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தும் புதிய எண்முறை வரிசை அமைப்பு முறையில், வானிலை முன்னறிவிப்பு அமைந்து இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் மூலம் மலேசியாவின் வானிலை முன்னறிவிப்புத் தரவுகளை அதிகத் தெளிவுத்திறனுடன் உருவாக்க முடியும் என்றும், இது மேலும் விரிவான மற்றும் உள்ளூர் மயமாக்கப்பட்ட முன்னறிவிப்புகளை வழங்க உதவும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த முன்னேற்றங்கள், இயற்கை பேரழிவுகளுக்கு எதிரான தயார்நிலை மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த உதவும் என்பதையும் டாக்டர் ஹிஷாம் தெளிவுபடுத்தினார்.








