Aug 3, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: 15 வயது மாணவன் மீதான விசாரணை தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: 15 வயது மாணவன் மீதான விசாரணை தொடங்கியது

Share:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள SMK Bandar Utama Damansara பள்ளியில் கடந்த ஆண்டு 16 வயது மாணவி Yap Shing Xuen குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 வயது மாணவன் மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

எட்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விசாரணையில், உயிரிழந்த மாணவியின் தாய், உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவர் உள்ளிட்ட 11 சாட்சிகளை அரசாங்க தரப்பு ஆஜர்படுத்த உள்ளது. இந்த விசாரணையில் பள்ளி ஆசிரியர்களும் சாட்சியமளிக்க உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மாணவன் சிறார் என்பதால் அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் Puncak Alam சீர்திருத்த மையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கு பொதுமக்கள் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி காலை 9.20 மணி முதல் 9.35 மணி வரை பள்ளியின் பெண்கள் கழிப்பறையில் Yap Shing Xuen-ஐ கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மாணவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மூன்று மாத மனநல பரிசோதனைக்குப் பிறகு, விசாரணையை எதிர்கொள்ள மாணவன் தகுதியானவர் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

மேலும், அரசாங்க தரப்பின் மூன்று சிறார் சாட்சிகள், குழந்தை சாட்சிச் சட்டம் 2007-ன் விதிகளின்படி சாட்சியமளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 வயது மாணவன் சார்பில் வழக்கறிஞர் Kitson Foong ஆஜராகிறார்.

அரசாங்கத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்களான Raja Zaizul Faridah Raja Zaharudin, Aqharie Durranie Aziz மற்றும் Ahmad Iqbal Azman வழக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், மலேசிய வழக்கறிஞர் மன்றம் சார்பில் Datuk Yasmeen Shariff மற்றும் மனித உரிமை ஆணையமான SUHAKAM சார்பில் Jason Lim, Jie Sheng ஆகியோர் கண்காணிப்பு வழக்கறிஞர்களாக ஆஜராகியுள்ளனர்.

Related News