ஜோகூர் பாரு, பிப்ரவரி.05-
ஜோகூர், கோத்தா திங்கியில் காச நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுவரை அப்பகுதியில் 33 பேருக்கு காச நோய் பரவியிருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி, கோத்தா திங்கி சுகாதார அலுவலகத்தில், ஒருவருக்கொருவர் நெருக்கிய தொடர்புடைய 804 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நோய் தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் அருகாமையில் உள்ள சுகாதார மையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், காச நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ஜோகூர் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காசநோய் என்பது Mycobacterium tuberculosis எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது குறிப்பாக நோய்கண்டவர்களுடன் நீண்ட நேர நெருங்கிய தொடர்பு மூலம் காற்றின் வழியாகப் பரவுகிறது.








