ஜோகூர், கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் பாதையில் நேரிட்ட லாரி விபத்து காரணமாக, இ.டீ.எஸ் மின்சார ரயில் சேவைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதன் மேல் இருந்த கான்கிரீட் கட்டமைப்பு உடைந்து விழுந்து தண்டவாளப் பாதையைச் சேதப்படுத்தியுள்ளது.
தண்டவாளத்தில் விழுந்த கான்கிரீட் கட்டமைப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த வழித்தடத்திலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் ஜேபி சென்ட்ரல் மற்றும் கெம்பாஸ் பாரு நிலையங்களில் இருந்து மாற்றுப் பேருந்துகள் மூலம் கூலாய் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் தங்களின் இலக்குகளை நோக்கி ரயில்கள் மூலம் பயணத்தைத் தொடரலாம் என மலாயன் ரயில்வே நிறுவனமான கே.டீ.எம்.பி தெரிவித்துள்ளது.
இந்த விபத்தினால் ஜேபி சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய பாடாங் பெசார், கேஎல் சென்ட்ரல் மற்றும் பட்டர்வொர்த் ஆகிய இடங்களுக்கான மூன்று முக்கிய இ.டீ.எஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களின் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும் என்றும், பயணிகள் நிலையங்களில் உள்ள கே.டீ.எம்.பி ஊழியர்களை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








