தொலைபேசி பயன்பாடு மற்றும் சமூக வலைத்தளங்களின் வடிவமைப்புகள் குறித்து கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒழுங்குமுறை மாநாட்டில் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மலேசிய ஆய்வியல் உள்ளடக்க மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெதிஹா மஹ்மூத் கூறுகையில், பயனர்களை ஒரே சுழற்சிக்குள் சிக்கவைக்கும் அல்காரிதம்களின் வடிவமைப்பு குறித்து அனைத்துலக ஒழுங்குமுறை ஆணையங்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், சிவப்பு எச்சரிக்கை அடையாளங்கள் மற்றும் தானியங்கி இயக்கம் போன்ற அம்சங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் எனெங் பரிதா இஸ்கந்தர் ஆபத்தான உள்ளடக்கங்கள் மற்றும் அடிமையாதல் போன்ற நடத்தைகளைப் பொறுத்தே ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அமையும் என்றும், இணைய பாதுகாப்புச் சட்டம் மற்றும் இடர் தணிப்புக் குறியீடு போன்ற விதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும், ஒழுங்குமுறைக்கு அப்பால் கல்வி மற்றும் பெற்றோரின் கண்காணிப்பும் அவசியமென அவர் சுட்டிக்காட்டினார்.








