கோலாலம்பூர், நவ.22-
கோலாலம்பூர் , ஸ்தாபாக்கில் தனது காருக்குள் இறந்து கிடந்த மாது ஒருவரை சோதனை செய்வது போல், அவரின் கழுத்தில் காணப்பட்ட நெக்ரெஸ் மற்றும் கைளில் அணிந்திருந்த தங்க கைசங்கிலி, காப்பு முதலிய தங்க ஆபரணங்களை திருடியதாக போலீஸ்காரர் ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டார்.
35 வயது லான்ஸ் காப்பரல் முகமட்அலிபா முகமட்சாபி என்ற அந்த போலீஸ்காரர், காருக்குள் இறந்து கிடந்த 26 வயது மாது ஒருவரின் தங்க ஆபரணங்களை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த அக்டேபார் முதல் தேதி அதிகாலை 2.40 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு, பிரிமா ஸ்தாபாக் ரோட், கார் நிறுத்தும் இடத்தில் லான்ஸ் காப்பரல் முகமட்அலிபா , இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 379 பிரிவின் கீழ் அநத் போலீஸ்காரர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 3,500 வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் அருண்ஜோதி அனுமதித்தார்.
காரில் இறந்து கிடந்த தமது மகள் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் காணவில்லை என்று அந்தப் பெண்ணின் தந்தையான ஒரு முன்னாள் போலீஸ்காரர் செய்து கொண்ட புகார் தொடர்பில் இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரிலிருந்து அந்தப் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட போது அவர் எந்தவொரு நகையும் அணிந்திக்கவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தந்தைக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்த இதன் தொடர்பில் அவர் போலீசில் புகார் செய்தார்.








