இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய ஊழியர் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் ஹுசைன் உமர் கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 வயதுக்கு மேற்பட்ட அந்த நபர கே.எல்.ஐ.ஏ பாதுகாப்பு சோதனைப் பிரிவில் பணியாற்றி வருவதாகவும், விரைவில் விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்றும், தேவையெனில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கே.எல்.ஐ.ஏ -வில் பயணிகள் 4 கட்ட பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்ட தானியங்கி ஸ்கேனில் சந்தேகம் ஏதும் இல்லையெனில் அடுத்த கட்டங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்றும், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹுசைன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட விமானி அம்பாங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து போதைப்பொருளை எடுத்துச் சென்று, கே.எல்.ஐ.ஏ-வில் தனது பயணப் பொதியை செக் -இன் செய்த பின்னர் கோத்தா கினபாலு வழியாக ஜகார்த்தா சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இதனையடுத்து, கே.எல்.ஐ.ஏ பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவது தொடர்பாக நேற்று போக்குவரத்து அமைச்சுடன் போலீசார் ஆலோசனை நடத்தியதாகவும் ஹுசைன் உமர் கான் தெரிவித்துள்ளார்.








