முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, அவரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ துன் டயிம் சைனுடின் ஆகியோருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை மேற்கொள்வதை காண மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர் என்று அம்னோ மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார்.
ஒரு வேளை, துன் மகாதீரை,எஸ்பிஆர்எம் விசாரணை செய்யும் நிலை ஏற்படுமானால் லஞ்ச ஊழல் வழக்குகளில் அது ஓர் அரிய நிகழ்வாகவும், பெரும் பரபரப்புக்குரியதாகவும் இருக்காது. காரணம். ஏற்கனவே முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையை மக்கள் கண்டு இருப்பதால் மற்றொரு முன்னாள் பிரதமர் ஒருவர், எஸ்பிஆர்எம் மினால் விசாரிக்கப்படுவது ஆச்சரியமாக இருக்காது. ஆனால், அதனை காண்பதற்கு மக்கள் மத்தியில் ஓர் இயல்பான ஆர்வம் இருக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் புவாட் சர்காஷி குறிப்பிட்டார்.
வரி ஏய்ப்புத் தொடர்பில் வெளிநாடுகளில் அதிகமான சொத்துக்களை குவித்துள்ள அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி வரும் Pandora Papers, மலேசிய மூத்த அரசியல்வாதியான துன் டாயிம் ஜைனுதீனின் சொத்து விவரங்களை அறிவித்ததைத் தொடர்ந்து அவரின் மகன்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இருக்கும் போது British Virgin Island நிறுவனத்தின் சொந்தக்காரர்களாக இருந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
டாயிமின் சொத்துக்கள் குறித்து நிறைய மர்மங்கள் புதைந்துக் கிடக்கின்றன. இந்நிலையில் மலேசியாவின் 50 செல்வந்தர்கள் பெயர் பட்டியலில் துன் டாயிம் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்பது தொடர்ந்து மர்மாக உள்ளது. அவரை எஸ்பிஆர்எம் விசாரணை செய்வது காலத்தின் கட்டாயமாகும் என்று டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார்.








