கோலாலம்பூர், பிப்ரவரி.09-
2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டமான சொஸ்மாவில் குறிப்பாக ஜாமீன் மற்றும் நீண்ட காலத் தடுப்புக் காவல் தொடர்பான 13 மற்றும் 30-வது பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் திருத்தங்களுக்கு அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இது தாக்கல் செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
"சொஸ்மா சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய உள்துறை அமைச்சு அனுமதி கோரி கடந்த வெள்ளிக்கிழமை தாம் தாக்கல் செய்த அமைச்சரவை அறிக்கைக்குக் கொள்கை ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று சிஃபிடின் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் உள்ள 73 குற்றங்களை அவற்றின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தவும், அதன் அடிப்படையில் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
20 அல்லது 30 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்குப் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. ஆனால், குறைந்த தண்டனைக்குரிய குற்றங்களுக்குப் ஜாமீன் வழங்குவது குறித்து மாஜிஸ்திரேட் அல்லது துணை பப்ளிக் பிராசிகியூட்டர் தீர்மானிக்கலாம் என்று சைஃபுடின் மேலும் விளக்கினார்.
மேலும், சொஸ்மா வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் புத்ராஜெயா திட்டமிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது ஜாமீன் வழங்கப்படாததால் நீண்ட காலம் காத்திருப்பது ஒரு தண்டனையாகவே கருதப்படுகிறது. இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தவே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுகிறது என்று அமைச்சர் சைஃபுடின் கூறினார்.
இந்தச் சட்டத் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத் தேர்வுக் குழு மற்றும் பிற தரப்பினருடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.








