கோலாலம்பூர், பிப்ரவரி.16-
மலேசியாவில் நாளை முதல் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களானது தொடங்கவுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, காலை வேளையில் மிதமான வானிலையும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
சீனப் புத்தாண்டின் முதல் நாளான நாளை பிப்ரவரி 17-ஆம் தேதி, தீபகற்ப மலேசியாவில், மிதமான வானிலை நிலவும் என்றும், ஜோகூர், சபா, சரவாக் மாநிலங்களில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பிற்பகல் தொடங்கி இரவு வரை, சிலாங்கூர், கோலாலம்பூர் உட்பட பல்வேறு மாநிலங்களில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மெட்மலேசியா எச்சரித்துள்ளது.
மேலும், வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி, பகாங், ஜோகூர், சபா, சரவாக் தவிர மற்ற மாநிலங்களில் மிதமான வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற்பகலில், ஜோகூரில் மீண்டும் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.








