லஹாட் டத்து, ஜூன் 21-
சபா, பத்து 9 ஜாலான் சிலம் என்ற இடத்தில் விரைவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் படுங்காயம் அடைந்துள்ளனர்.
செம்போர்னா -விலிருந்து கோத்தா கினபாலு -விற்கு 16 பயணிகள், இரண்டு ஓட்டுநர்கள் உட்பட ஒரு பேருந்து நடத்துநர் என மொத்தம் 19 பேரை ஏற்றிச் சென்ற அப்பேருந்து விபத்துக்குள்ளாகியதாக லஹாட் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் சும்சோ ரஷீத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பேருந்து 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக சிலர் அப்பேருந்திலிருந்து தானாகவே வெளியேற முயற்சித்ததாகவும் சும்சோ ரஷீத் கூறினார்.
விபத்தில் காயமுற்ற நான்கு பேரும் லஹாட் டத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளை, இச்சம்பவம் ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சும்சோ ரஷீத் மேலும் குறிப்பிட்டார்.








