Mar 24, 2026
Thisaigal NewsYouTube
HRD Corp, அரசு சார்பு நிறுவனத்திலிருந்து எந்தவொரு அதிகாரியும் இடை நீக்கம் செய்யப்படவில்லை
தற்போதைய செய்திகள்

HRD Corp, அரசு சார்பு நிறுவனத்திலிருந்து எந்தவொரு அதிகாரியும் இடை நீக்கம் செய்யப்படவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5-

மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp. பிலிருந்து (எச்.ஆர்.டி.எப். கோர்ப்) எந்தவொரு அதிகாரியும் இடை நீக்கம் செய்யப்படவில்லை என்று மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாவுட் தெரிவித்துள்ளார்.

HRD Corp. செயல்பாடுகள் மற்றும் அதன் நடைமுறைகள் முறையாக இல்லை என்று தேசிய கணக்காய்வுக்குழு தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியிருந்தைத் தொடர்ந்து அந்த மனித வள மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து எந்தவொரு அதிகாரியும் நீக்கப்படவில்லை என்று கைருல் டிசைமி தெளிவுபடுத்தினார்.

எனினும் இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சு அளவில் உள் விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கைருல் டிசைமி தெரிவித்தார்.

HRD Corp. தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொள்ளும் விசாரணை நியாயமாகவும், தொழில் நிபுணத்துவத்திற்கும் ஏற்ப நடைபெறும் என்று அந்த ஆணையம் உறுதி அளித்து இருப்பதாக கைருல் டிசைமி குறிப்பிட்டார்.

முதலாளிமார்கள் செலுத்தக்கூடிய லேவி பணத்தின் மூலம் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மறு பயிற்சி அளித்து, அவர்களை திறன் பெற்ற தொழிலாளர்களாக உருவாகுவதற்கு பயிற்சி அளிக்கும் கடப்பாட்டை கொண்டுள்ள HRD Corp, அந்தப் பணத்தை முதலீடு செய்வதற்கு பயன்படுத்தி இருப்பதை தேசிய கணக்காய்வுக்குழு நேற்று அம்பலப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News