கங்காரில் அண்மையில் இடிக்கப்பட்ட ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கை எதிர்கொள்ள பெர்லிஸ் மாநில அரசு தயாராக இருப்பதாக மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்சா தெரிவித்துள்ளார்.
1965 தேசிய நிலச் சட்டத்தின் கீழ், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி அமைந்திருந்ததால் கோவிலை அகற்ற மாநில அரசுக்கு உரிமை இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால், கோவில் நிர்வாகக் குழு ஆகஸ்ட் 19-ஆம் தேதி பெர்லிஸ் மாநில அரசு, கங்கார் நில அலுவலகம் மற்றும் நகராட்சி மன்றத்திற்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு மறுநாளே, ஆகஸ்ட் 20-ஆம் தேதி கோவில் இடிக்கப்பட்டது.
இதனிடையே, வரும் டிசம்பர் 31 வரை கோவிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று முன்னர் உறுதியளித்ததாக கோவில் நிர்வாகக் குழு தரப்பு தெரிவித்துள்ளது.








