கோலாலம்பூர், பிப்ரவரி.28-
ரவாங், குண்டாங் தாசெக் பீரு ஏரியில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில், துணிச்சலாக ஏரிக்குள் குதித்து, அக்காரில் சிக்கியிருந்த தாயையும், அவரது இரண்டு குழந்தைகளையும் மீட்ட ஏழு இளைஞர்களின் செயல்களை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அன்வார், அங்கு வருகை புரிந்திருந்த, அந்த 7 இளைஞர்களுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நடந்த இவ்விபத்து குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அன்வார் அவர்களிடம் விசாரித்தார்.
மேலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பிறர் உயிரைக் காக்க அவர்கள் மேற்கொண்ட தியாகம் மூன்று உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும் அன்வார் புகழாரம் சூட்டினார்.
அதே வேளையில், அந்த இளைஞர்களின் வீரச் செயலைப் பாராட்டி அவர்களுக்கு வெகுமதிகளையும் வழங்கினார்.
இவ்விபத்தின் போது, அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு 'மனிதச் சங்கிலி' போலச் செயல்பட்டு, காருக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்ட காணொளியானது சமூக ஊடகங்களில் பரவி பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.








