கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-
கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பாதை இடிந்து, பெரும் குழியில் இந்திய மாது விழுந்து காணாமல் போன சம்பவத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.
அதேவேளையில் அந்த இந்தியப் பிரஜையை தேடும் பணி தொடர்ந்து முழு வீச்சில் தொடரப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இன்று உறுதி அளித்துள்ளார்.
ஒரு சுற்றுப்பயணியான ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது விஜயலெட்சுமியை தேடும் பணி, தங்கு தடையின்றி தொடரப்பட வேண்டும் என்று தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் விஜயலெட்சுமி காணாதது குறித்து மிகுந்த துயரில், பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்ளும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
விஜயலெட்சுமியை தேடும் பணியில் இடையூறுகள் ஏதும் இருக்குமானால் அவற்றை உடனடியாக களையச் செய்து, மீட்புப்பணியை தொடருமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.








