பெந்தொங் , ஜூலை 03-
கடந்த சனிக்கிழமை ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸ், 16.5 ஆவது கிலோ மீட்டரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து .இருவர் பலியான சம்பவம் தொடர்பில் அந்த பேருந்தை செலுத்திய ஓட்டுநர், நாளை பெந்தொங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
32 வயதுடைய அந்த ஓட்டுநருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முகமது கஹர் தெரிவித்தார்.
மரணம் விளைவித்தது மற்றும் பேருந்து செலுத்துவதற்கான லைசென்ஸை கொண்டிருக்காதது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
காலை 11 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதுடன் மேலும் 19 பேர் காயங்களுக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இதற்கு முன்பு 27 சம்மன்களை பெற்று இருப்பதாக சைஹாம் முகமது கஹர் குறிப்பிட்டார்.








