கிளாந்தான், கோலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனை விடுதியில், 29 வயது மதிக்கத்தக்க பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை விசாரணை செய்ய, கிளந்தான் சுகாதாரத் துறை ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
அம்மருத்துவரின் இறப்பிற்கான காரணம், பணியிட மன அழுத்தம் மற்றும் பிற காரணிகளை ஆராய்ந்து அக்குழுவானது முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் என அதன் இயக்குநர் அஸ்மான் யாக்கோப் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தால் தாங்கள் மிகவும் வருத்தமடைவதாகவும், நேற்று அம்மருத்துவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் அஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர், எகிப்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்று, கோலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 6-ஆம் தேதி, தங்கும்விடுதியில் உள்ள குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் இதில் எந்தவித குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை. உடற்கூறாய்வு முடிவுகளின்படி, கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.








