கோலாலம்பூர், நவ.13-
முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுதீன் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் நிலை என்ன என்பது குறித்து துணை பப்ளிக் பிராசிகியூட்டருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
86 வயதுடைய டாயிம், தனது சொத்து விபரங்களை அறிவிக்காதது தொடர்பில் அவர் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். துன் டாயிமின் மறைவைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கை பதிவு செய்துள்ள பிராசிகியூஷன் தரப்பில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த வழக்கு நிலை குறித்து துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் முடிவு செய்யும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.








