கோலாலம்பூர், மே.28-
பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் தோல்விக் கண்டுள்ள ரஃபிஸி ரம்லி, பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என்று அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின் ஆலோசனை கூறியுள்ளார்.
துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் நூருல் இஸாவிடம் தோல்விக் கண்டால், பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என்று ரஃபிஸி ரம்லி பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.
அது தேர்தல் வியூகமாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆற்றலும் திறனும் வாய்ந்த ரஃபிஸி ரம்லி பதவி விலக வேண்டியதில்லை. மாறாக, கட்சிக்குள்ளேயே தனது போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.
தனது மகள் நூருல் இஸாவை துணைத் தலைவர் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரஃபிஸி ரம்லியை அன்வார் கழற்றி விட்டுள்ளார் என்று பரவலானக் குற்றச்சாட்டுகள் மத்தியில் , ரஃபிஸி ரம்லி பதவி விலகுவது உசித்தமான செயல் அல்ல என்று கைரி ஜமாலுடின் வலியுறுத்தியுள்ளார்.








