மாநிலத் தேர்தல்களைத் தள்ளிவைப்பதற்காக 'அவசரகால நிலை' பிரகடனம் செய்யப்படுவதைக் கையில் எடுப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என மூடா கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் எச்சரித்துள்ளார்.
அவசரகால நிலை என்பது அரசியல் தேவைகளுக்கான கருவி அல்ல என்றும், அது நாட்டின் பாதுகாப்பு அல்லது பேரிடர் காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றும் டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
"வாழ்க்கைச் செலவின உயர்வைக் காரணம் காட்டி, மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கக் கூடாது. பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தேர்தலைத் தள்ளிவைப்பது, நிர்வாகத் தவறுகளுக்கு வழிவகுப்பதோடு, ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைத்துவிடும்," என இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டாக்டர் சிவபிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க மக்களுக்குப் புதிய ஆணை தேவைப்படுவதாகவும், தேர்தலைத் தள்ளிப்போடுவதால் பொருளாதார நிலைத்தன்மை வராது என்றும் அவர் கூறினார். தெளிவான கொள்கைகளும், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முறையான அரசாங்கமுமே நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என டாக்டர் சிவபிரகாஷ் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.








