கோலாலம்பூர், செந்தூல், லோர்ரோங் செந்தூல் பாசார் ஒஃப் செந்தூல் பசார் என்ற முகவரியில் வீற்றுள்ள ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிக்கு வழிவிடும் வகையில் ஆலயத்தின் பாலஸ்தான நிகழ்வு நாளை நவம்பர் முதல் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
செந்தூல், ரத்தினப்பிள்ளை கிராமத்துக்கு அருகில் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் "கேங் லைன்" ( Geng Line ) ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம், ரயில் இரட்டை தண்டவாளப்பாதை நிர்மாணிப்புத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் கைவிடப்பட்ட போது அந்த ஆலயத்தை பராமரித்து வந்த ந. தினகரன், 18 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அனுமதியுடன் ஆலயத்தை செந்தூல் பசாருக்கு பின்னால் இடம் மாற்றம் செய்தார்.
.
இந்நிலையில் ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக திருப்பணியையொட்டி ஆலயத்தின் பாலஸ்தானம் நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் அதேவேளையில் ஆலய திருப்பணிக்கு பொது மக்கள் நன்கொடை அளித்து உதவுமாறும் தினகரன் கேட்டுக்கொண்டார்.
18 ஆண்டுகள் புதிய இடத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் பாலஸ்தானம் நிகழ்விற்கு சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யுமாறு ஆலயத் தோற்றுநர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.








