கோலாலம்பூர், பிப்ரவரி.13-
நிதிச் சேவை நிறுவனமான Velocity Capital Bhd-இல் தனக்கு பங்குகள் இருப்பதாக புளூம்பெர்க் வெளியிட்ட செய்தி தொடர்பில், விசாரணை செய்ய, அரசாங்கம் எந்த ஒரு சுயேட்சை விசாரணை குழுவை நிறுவினாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
தனது அனைத்து நிதி மற்றும் சொத்து அறிவிப்புகளும் தற்போதுள்ள பொது சேவை விதிமுறைகளின்படியும், ஒவ்வோர் அரசு ஊழியருக்கும் தேவையான பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதையும் அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்களின் அடிப்படையில் உண்மைகளைத் தீர்மானிப்பதில் வெளிப்படையான, சுதந்திரமான செயல்முறையை தான் வரவேற்பதாகவும், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் கொள்கைகளுக்கு இணங்குவதாகவும் அஸாம் பாக்கி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








