1எம்.டி.பி.யில் நிகழ்ந்துள்ள ஊழலை அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் தொகுதி அம்னோ டிவிஷன் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் துணைத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, நீக்கப்பட்ட டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தமது அரசியல் வைரியான முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் இணைவதற்கான சாத்தியத்தை பெர்சத்து கட்சி மறுக்கவில்லை.
இரு துருவங்களாக இருக்கும் நஜீப்பும், முகைதினும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணையும் சாத்தியம் உள்ளது என்று முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.
தாம் இழைத்த குற்றத்திற்கு நஜிப் தண்டனை அனுபவித்து வருகிறார்.தண்டனைக்கு பிறகும் ஒருவர் மீது குரோத மனப்பான்மையை காட்டுவது முறையல்ல.அந்த வகையில் நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடக்கப் போவது நல்லதாக இருக்க வேண்டும். அரசியல் பேதமின்றி மலாய்க்காரர்கள் ஒன்றிணைய வேண்டும். பழைய பகைமையை பாதுகாக்கக்கூடிய நபர் முகைதீன் அல்ல. நஜிப்புடனும், முன்னாள் பிரதமரர் துன் மகாதீர் முகமதுவுடனும் நட்பு பாராட்டவே முகைதீன் விரும்புகிறார் என்று ரசாலி இட்ரிஸ் குறிப்பிட்டார்.








