சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி மேன்மேலும் பலவீனப்படுத்தப்பட்டு வருவதாகவும், நீதி பெரும்பாலும் அதிகாரத்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமலாக்கத்தாலும் மறைக்கப்படுவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க மாநாட்டில் உரையாற்றிய அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் எட்டக்கூடியதாகவும், நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அன்வார், ஒரு நியாயமான மற்றும் ஒழுங்கான சர்வதேச அமைப்பிற்கு அதன் ஒருமைப்பாடு முக்கியமானது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், தற்போதைய உலக சூழலில், வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையிலான சட்ட முறை நிலவுவதாகவும், சக்திவாய்ந்த நாடுகள் தங்கள் நலன்களை முன்னிறுத்தி நிலையான விதிகளை புறக்கணிக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சட்ட அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை ஆதரிப்பதாக கூறும் சில சக்திவாய்ந்த நாடுகளே, அதனைப் பின்பற்றாமல், அதற்கு எதிரான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சர்வதேச உறவுகளில் சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படக் கூடாது என்றும், பொறுப்பிலிருந்து தப்பிக்கவும், தற்காப்பு உரிமையை மறுக்கவும் சட்டமானது பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்வார் உரையாற்றிய இந்நிகழ்ச்சியில், சட்டசீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் , தலைமை நீதிபதி வான் அகமட் ஃபரிட் வான் சல்லே மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டான் ஸ்ரீ டத்தோ சைனுன் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரு மொழி மாதிரிகள் போன்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் சட்டத் துறை எதிர்கொள்ள வேண்டிய சவால்களாக அன்வார் விவரித்துள்ளார்.








