புத்ராஜெயா, பிப்ரவரி.03-
விமான நிலையங்களில் செட்டிங் முகப்பிடங்கள் அல்லது Pasport Terbang மோசடியை ஒழிப்பதற்கான முயற்சிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பான உளவுத் தகவல்களும் புகார்களும் தற்போதும் வந்து கொண்டிருப்பதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையின் விளக்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களை AKPS இன்னும் சேகரித்து வருவதாக அவர் கூறினார். "நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் தாமும் அமைச்சின் உயர்மட்டத் தலைமையும் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற AKPS அதிகாரிகளுடனான சிறப்புக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
இதுவரை 'செட்டிங் முகப்பிடங்கள் ' விவகாரத்தில் தொடர்புடைய 39 நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. அவர்களில் சிலர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 'இ-வேஸ்ட்' (E-waste) எனப்படும் மின்னணு கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதிலும் AKPS கவனம் செலுத்தி வருகிறது.
அண்மையில், கிள்ளான் துறைமுகத்தில் மின்னணு கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட ஆறு கொள்கலன்கள் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், எஸ்பிஆர்எம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை ஆகியவற்றுடன் இணைந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் AKPS-க்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடத்தல் கும்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அல்லது கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது அவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் மிகக் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரிகள் AKPS-இல் பணியமர்த்தப்படுவது குறித்துக் கருத்து தெரிவித்த முஹமட் ஷுஹைலி, அவர்களின் உளவுத்துறை சார்ந்த நிபுணத்துவம் எல்லைக் குற்றங்களைத் தடுக்க பெரிதும் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.








