மோட்டார் நியூரோன் நோயுடன் போராடி வரும் முன்னாள் தேசிய நடை பந்தய விளையாட்டு வீரர் ஜி. சரவணனை, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் தௌபிக் ஜொஹாரி நேற்று நேரில் சந்தித்து, தனது அமைச்சின் சார்பில் நிதியுதவியை வழங்கினார்.
சரவணன் உட்பட நாட்டிற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்த முன்னாள் வீரர்களின் நலனை புறக்கணிக்காமல், அவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்க அமைச்சு உறுதியாக இருப்பதாகவும் தௌபிக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சும், தேசிய விளையாட்டு வீரர் நல அறக்கட்டளையான யாகேப்-உம், சரவணனின் தற்போதைய தேவைகள் மற்றும் மருத்துவ செலவுகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் பிசியோதெரபி சிகிச்சை, மருத்துவ சிகிச்சை மற்றும் மாதாந்திர செலவுகள் உட்பட அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் போதுமான உதவி கிடைப்பதை உறுதி செய்வதே அமைச்சின் நோக்கம் என்று நேற்று பினாங்கு மாநிலம் புக்கிட் மெர்தாஜாமில், ஜி,சரவணனைச் சந்தித்த பிறகு தௌபிக் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1998-ஆம் ஆண்டு, காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்தவர் ஜி. சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.








