கூலிம், மார்ச்.29-
கெடா, கூலிம் பகுதியில் உள்ள லாடாங் அனாக் கூலிம் பகுதியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிளுடன் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவற்படையினர் இதனைப் படுகொலை வழக்காகப் பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று மதியம் பறவை பிடிக்கச் சென்ற நபர் ஒருவர், அங்கு எரிந்த நிலையில் கிடந்த சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்படையினர் எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து உயிரிழந்தவர் நான்கு நாட்களாகக் காணாமல் போன 77 வயது முதியவர் என்பதை உறுதிச் செய்தனர்.
இந்தக் கொடூரமான சம்பவம் தொடர்பாக 22வயதும், 68 வயதும் கொண்ட இரண்டு சந்தேக நபர்களைக் காவற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி புதன்கிழமை வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக கூலிம் மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.
தற்போது இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், முதியவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்துக் காவற்படையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








