கோலாலம்பூர், மார்ச்.07-
மலேசியா முழுவதும் உள்ள தேசிய தகவல் பரவல் மையங்களான நாடி (NADI) மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்களுக்கு, வரவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 2,196 பணியாளர்கள் இந்த ஒருமுறை வழங்கப்படும் ஊக்கத் தொகையினால் பயனடைவர். 'நாடி' மைய வரலாற்றிலேயே இத்தகைய போனஸ் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், இதற்கான ஒப்புதலை மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தகவல்களை மக்களிடம் கொண்டுச் சேர்ப்பதிலும், டிஜிட்டல் மயமாகுதலை ஊக்குவிப்பதிலும் ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கிடையில், சுமார் 10,000 உள்ளூர் தொழில்முனைவோரின் தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் Bazar Raya Nadi 2026' எனும் புதிய திட்டத்தையும் அமைச்சர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.








