கிள்ளானில் நாய் பிடிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற தாம், எந்த விலங்கையும் காயப்படுத்தும் அல்லது கொல்லும் நோக்கத்துடன் அங்கு செல்லவில்லை என்று ரோக்கி என்ற நாய் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதான ஷா ஹிஸாம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற அந்த நடவடிக்கையில், கிள்ளான் மாநகர மன்றமான எம்.பீ.டீ.கே தமக்கு வழங்கிய பணியை நிறைவேற்றுவதற்காக மட்டுமே தாம் பங்கேற்றதாக அவர் கூறினார்.
ரோக்கியின் மரணம் தமக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும், ஆனால் பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாகவே இந்த நடவடிக்கையில் தாம் பங்கேற்றதாகவும், இதில் கலந்து கொண்ட எம்.பீ.டீ.கே அமலாக்க அதிகாரிகள் அனைவருக்கும் நாய் பிடிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்து, தேவையான உபகரணங்களை வழங்கியதாகவும் ஷா ஹிஸாம் கூறினார்.








