3 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைத் துறையின் முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது, 53 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவொரு அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அறிவித்துள்ளது.
தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரிலுள்ள தென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு தாரா, அமோய் மற்றும் கிலாட் ஆகிய மூன்று ஆசிய யானைகள், கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையிலான 25 ஆண்டுகால உத்திசார் பாதுகாப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அல்லது அவருடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனமும் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப் பரிமாற்றங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இவ்வழக்கு தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், அத்துடன் நிதி மற்றும் வங்கிச் சார்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அப்துல் ஹலீம் அமான் தெரிவித்துள்ளார்.








