மலாக்காவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில், முதலாம் படிவத்தில் பயிலும் 13 வயது மாணவர் ஒருவர், பேனாக் கத்தியைக் காட்டி சக மாணவர்களை விரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
இது குறித்து அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அகமது அபு பக்கர் கூறுகையில், இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில், பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற மாணவர் பாராட்டு நிகழ்ச்சியின் போது நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இரு மாணவர்கள் தொடர்ந்து ஐஸ் கட்டிகளை எறிந்து தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த அந்த 13 வயது மாணவர், தனது பென்சில் பெட்டியில் இருந்த பேனாக் கத்தியை எடுத்துக் கொண்டு, அவர்களில் ஒருவரை சுமார் 50 மீட்டர் தூரம் விரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மற்ற மாணவர்களும் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








