மலாக்கா, ஜலான் சான் கூன் செங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் புறப்பாடப் பாடநிலை அறிமுக நிகழ்ச்சிக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த 18 வயது ஆறாம் படிவ மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் வகுப்பறை நடைபாடையில் நின்றிருந்தபோது அவர் மயக்கமடைந்தார். உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, சுமார் 68 நிமிடங்களுக்கும் மேலாக அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அன்றைய தினம் இரவு 7.11 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மலாக்கா தெங்கா போலீஸ் துணைத் தலைவர் ஹலிம் அபாஸ் கூறுகையில், அம்மாணவருக்கு எவ்வித மருத்துவப் பின்னணியும் இல்லை என்றும், அவர் விளையாட்டுத் துறையில் சுறுசுறுப்பாக இருந்தவர் என்றும் அவரது தாயார் கூறியதாகத் தெரிவித்தார்.
நேற்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், பிறப்பிலிருந்தே இதயக் குறைபாடே அவரது மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என போலீஸார் வகைப்படுத்தியுள்ளனர்.








