மலேசியாவில் நீண்டகாலம் பிரதமராகப் பணியாற்றிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது இன்று ஜூலை 10-ஆம் தேதி, தனது 101-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கடந்த 1925-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி கெடா மாநிலத்தின் அலோர் ஸ்டார் நகரில் பிறந்த மகாதீர், ஒன்பது உடன்பிறப்புகளில் இளையவராவார்.
மேலும், கடந்த 1956-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி ஹஸ்மா அலியும், இன்னும் இரண்டு நாட்களில் தனது 100-வது பிறந்தநாளை எட்டவுள்ளார்.
இதனிடையே, இவ்வாண்டின் தொடக்கத்தில், வீட்டில் கால் இடறி விழுந்ததில், மகாதீருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐ.ஜே.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, உடற்பயிற்சி மூலம் சிகிச்சை பெற அவர் முடிவு செய்தார்.
அதேவேளையில், இடுப்பு எலும்பு முறிவுக்குப் பிறகு, மகாதீர் தற்போது சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தாலும் கூட, தொடர்ந்து பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அண்மையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, லங்காவியில் பொதுமக்களைச் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மகாதீருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
101வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. நீங்கள் நல்ல உடல்நலத்துடனும், இறைவனின் அருளுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தாம் மகாதீர் ஆட்சியில், துணைப் பிரதமராக பணியாற்றிய காலத்தில், இருவரும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்த பழைய புகைப்படத்தையும் அன்வார் பகிர்ந்துள்ளார்.








