பேராக் மாநிலம் கம்பாரில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியின் வகுப்பறையில் பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 10.30 மணியளவில், இடைவேளையின் போது, வகுப்பறையைச் சோதனையிட்ட 17 வயது மாணவர் தலைவர், புகை நாற்றம் வீசுவதை உணர்ந்து, உள்ளே சென்று பார்த்த போது, நாற்காலி தீப்பிடித்து எரிவதைக் கண்டார்.
தகவலறிந்த ஆசிரியர்கள் உடனடியாக ஈரத்துணியால் தீயை அணைத்து, அது பரவாமல் தடுத்தனர்.
மேலும், இச்சம்பவம் நிகழ்ந்த வகுப்பறையில் சிசிடிவி வசதி இல்லாத நிலையில், சம்பவத்தின் போது அனைத்து மாணவர்களும் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர்களின் குறும்புத்தனத்தினால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








