மலாக்காவில் உள்ள சுங்கை உடாங் சிறைச்சாலைக்குள் ட்ரோன் மூலம் புகையிலை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் வெளியிட்டுள்ள தகவலில், தமன் கிரிஸ் சத்ரியா, சுங்கை உடா ங்பகுதியில் உள்ள ஒரு வீட்டில், புதன்கிழமை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 46 வயதுடைய உள்ளூர் ஆண் ஒருவரும், 27 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 3.10 மணியளவில் கிடைத்த போலீஸ் புகாரின் அடிப்படையில், D4 கிளை, குற்றப் புலனாய்வுத் துறை, மலாக்கா போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் சுங்கை உடா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அச்சோதனையின் போது, சிறைக்குள் கடத்துவதற்காக தயாரித்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், ட்ரோன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுல்கைரி முக்தார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








