Jul 18, 2026
Thisaigal NewsYouTube
"நெட்வொர்க் பள்ளியின் ஒரு வளாகத்தில் விதிமீறல் நடந்துள்ளது" - ஜோகூர் மந்திரி பெசார் தகவல்
தற்போதைய செய்திகள்

"நெட்வொர்க் பள்ளியின் ஒரு வளாகத்தில் விதிமீறல் நடந்துள்ளது" - ஜோகூர் மந்திரி பெசார் தகவல்

Share:

ஜோகூர் பாருவிலுள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வந்த நெட்வொர்க் பள்ளி, பயன்படுத்தி வந்த இரண்டு வளாகங்களில் ஒன்று, ஊராட்சி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஓன் ஹாபிஸ் காசி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்கந்தர் புத்ரி நகர் மன்றமான எம்.பி.ஐ.பி மேற்கொண்ட ஆய்வில், இரண்டு வளாகங்களில் ஒன்று செல்லுபடியாகும் அலுவலக வர்த்தக உரிமத்துடன் செயல்பட்ட நிலையில், மற்றொரு வளாகம் எம்.பி.ஐ.பி-இன் வர்த்தக உரிமம் இன்றி இயங்கி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்ட வளாகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளுக்கு முரணான விளம்பர பலகை அமைத்திருந்ததற்காக மேலும் ஒரு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதாக ஓன் ஹாபிஸ் காசி தெரிவித்துள்ளார்.

முன்னாள் காயின்பேஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் முதலீட்டாளருமான பாலாஜி சீனிவாசன் நிறுவிய இந்த தனியார் குடியிருப்பு சமூகமான நெட்வொர்க் பள்ளி, அதன் பங்கேற்பாளர்களில் இஸ்ரேலிய நாட்டவர்கள் இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

எனினும், நெட்வொர்க் பள்ளியில் பங்கேற்ற 40 நாடுகளைச் சேர்ந்த 266 வெளிநாட்டினரும் செல்லுபடியாகும் குடிநுழைவு ஆவணங்களுடன் மலேசியாவில் தங்கியிருந்ததாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Related News