சபாவின் கடல் எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மேற்கொண்டுள்ள புதிய எல்லை நீட்டிப்பு உரிமை கோரலுக்கு எதிராக, மலேசியா, ஐ.நா. சபையில் புதிய அதிகாரப்பூர்வப் புகாரை அளித்துள்ளது.
இது குறித்து மலேசியா மௌனம் காப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் தனது கடல் எல்லைக் கோரிக்கையை முன் வைப்பதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை 24 அன்றே மலேசியா தனது வலுவான எதிர்ப்பை ஐநா-வில் முன்கூட்டியே பதிவு செய்து விட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
சபாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மலேசியா தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், முன்னதாக 2024 இல் சமர்ப்பிக்கப்பட்ட எதிர்ப்பை மலேசியா தற்போதும் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். சபா எல்லை விவகாரத்தில் மத்திய அரசாங்கம் மௌனம் காப்பதாக முன்னாள் முதலமைச்சர் டத்தோ யோங் தெக் லீ விமர்சித்திருந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.








